திருநெல்வேலி: பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆயுத கலாச்சாரம், மோதல்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் என மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.
நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் அமர்வு ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் 16 க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கண்ணதாசன் கூறியதாவது:
தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை கடந்த காலத்தை விட தற்போது மிகவும் குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.
2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கொரோனா காலத்தில் தேக்கமடைந்த நிலையில் அந்த வழக்குகளே தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. அவசர தேவை இருந்தால் வழக்குகள் உடனுக்குடன் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைதள மோகம் தொடர்பாகவே மாணவர்கள் மத்தியில் பிரச்சனைகள் எழுந்து வன்முறைகளாக மாறுகிறது. ஆசிரியர்கள் நல்லொழுக்கம் தொடர்பான வகுப்புகளை எடுத்து மாணவர்கள் மத்தியில் நல்ல புரிதலை கொண்டு வர வேண்டும். சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
சினிமா போஸ்டர்களில் வன்முறை மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீதிபதி சந்துரு கமிட்டியின் அறிக்கைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதில் உள்ள நல்ல பல்வேறு தரவுகளை எடுத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
காவல் துறைக்கு எதிரான மனித உரிமை வழக்குகள் புகார்தாரர்கள் மூலம் கொடுக்கப்பட்டாலும் உரிய விசாரணை மேற்கொண்டு அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச் சாலைகளில் ஆய்வு செய்யும் போது பலர் கைகள் கால்கள் அடிபட்டு காணப்படுகின்றனர். விசாரணை நடத்தினால் அவர்கள் யாரும் காவல் துறை மீது குற்றம் சுமத்துவதில்லை. தாங்களே கீழே விழுந்ததாக மட்டுமே தெரிவிக்கின்றனர் . மனித உரிமை மீறல் தொடர்பான புகார் அளித்தால் உரிய முறையில் மனித உரிமை ஆணையத்தால் விசாரணை நடத்தப்படும். காவல் துறை மீது உண்மைக்கு மாறாக புகார் அளித்தால் ஆணையம் அதை ஒரு போதும் அனுமதிக்காது.
இவ்வாறு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.