சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 17) நிறைவடைந்துள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தேர்வு நாளையுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது.
இதையடுத்து ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை முடித்து, தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 30 ஆம் தேதி என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வு நாளை (24.4.2025) முடிவடைய உள்ளது. எனவே, 25.4.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை முடித்து, தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30.4.2025 என தெரிவிக்கப்படுகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டில் 2.6.2025 (திங்கள்கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே வரும் ஜூன் 2 ஆம் தேதி (2.6.2025) அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.'' என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, "தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025 எனவும், 01.05.2025 முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 (திங்கட்கிழமை) என அறிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'முதல்வன்' ஆகி இருக்கும் 'நான் முதல்வன்' திட்ட மாணவர்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் நிலையில் மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றும், மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வர வேண்டும் என்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்