சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பிரபல ஆங்கில நாளிதழ் இன்று பேட்டி கண்டது. இதில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு ஸ்டாலின் விளக்கமாக பதிலளித்திருக்கிறார். அவற்றில் சில முக்கியமான மற்றும் சவாலான கேள்விகளை இங்கு பார்க்கலாம்.
கேள்வி: தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மும்மொழிக் கொள்கை விவகாரம் மற்றொரு பிரச்னையாக உள்ளதே..?
பதில்: இந்தி மொழி ஆதிக்கம் எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வடமாநிலங்களே சாட்சி. பல வட மாநிலங்கள், அவற்றுக்கு சொந்தமான தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த 50 ஆண்டுகளில் இழந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி பாதுகாப்பிற்கும் எங்களின் இருமொழிக் கொள்கையே பாதுகாப்பாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் மறைமுக திட்டம்தான் இந்த மும்மொழிக் கொள்கை. எனவேதான், அதனை உறுதியுடன் எதிர்க்கிறோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை நடத்துகிறீர்கள் என பாஜக சொல்கிறதே..?
பதில்: அரசியல் சாசனம் தந்திருக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சாசன அட்டவணையில் உள்ள தமிழ் மொழியை வளர்க்க பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாக வைத்திருக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட மத, இனக் கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றில் கறைப்படிந்த பக்கங்களாக உள்ளன. அப்படிப்பட்ட பாஜகவினர், தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியல் நடப்பதாக கூறுவது, மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதை போன்றது.
இதையும் படிங்க: ஆளுநர் எங்களுக்கு தபால்காரர் தான்.. ரொம்ப உதவியும் பண்றாரு... மு.க. ஸ்டாலின் நறுக்! |
கேள்வி: மார்ச் 31, 2026-இல் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என உங்கள் அரசாங்கமே சொல்லி இருக்கிறதே..?
பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்துவிட்டு, காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி அதிமுக ஆட்சி. அதன் பிறகு, நிதி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை செய்து, நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்குகிறது. 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது.
கேள்வி: தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் திடீரென போதைப்பழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது போன்று தெரிகிறதே..?
பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக் கூடிய ஒன்றை, தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருட்கள் விற்போரின் வங்கிக்கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறைத்தண்டனையை பெற்றுத் தருவது என தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுவதாக பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. என்று மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.
