சென்னை: எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) அடுத்த முறை டெல்லி சென்றால் ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா’வால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சட்டத் திருத்த சட்ட முன்வடிவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய பேசிய அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் வேலுமணி, ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வஃக்ப் சட்ட திருத்த மசோதா’ இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என்றார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா - அ.தி.மு.க ஆதரவு
மேலும், ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள வஃக்ப் சட்டத் திருத்த மசோதாவில், இஸ்லாமியர்களின் உரிமைகள் பலவற்றை பறிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். வஃக்பு வாரியத்திற்கு என இருக்கும் சட்டதிட்டங்கள் பலவற்றை ஒன்றிய அரசு திருத்தி இருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டதாகக் குறிப்பிட்ட அவர், வக்ஃப் மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களால், இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் நடைமுறைகளுக்கு எதிரான பல மாற்றங்கள் ஏற்படும் நிலை வரும். இதனால் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க இச்சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறது என்று பேசினார்.

நிறைவாக, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பல்வேறு மாற்றங்களை செய்துள்ள ஒன்றிய அரசின் வஃக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அ.தி.மு.க முழுமையாக ஆதரிக்கிறோம் என்றார்.
எதிர்கட்சிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘வஃக்ப் சட்ட திருத்த மசோதா’வை திரும்ப பெற வேண்டும் என்ற மசோதாவிற்கு பா.ஜ.க தவிர அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஆதரவு தந்துள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
மேலும், பிரதான எதிர்கட்சிக்கு ஒரு கோரிக்கை வைப்பதாகத் தெரிவித்த அவர், “ஏற்கனவே சட்டப்பேரவையில் இருமொழி கொள்கை குறித்து பேசியபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார்கள்; யாரை சந்திக்க உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல் வந்துள்ளது என்றேன்.
இதனை டெல்லியில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, யாரையும் பார்க்க வரவில்லை; கட்சி அலுவலகத்தை பார்க்க வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், மாலையில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். சந்தித்தை தவறு என கூறவில்லை; சந்திக்கட்டும். இருமொழி கொள்கை குறித்து பேசியிருப்பதாக சென்னையில் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். இதற்கு அவையின் சார்பில் நன்றி தெரிவித்துகொள்கிறேன்,” என்றார்.
தொடர்ந்து, இதேபோல் எப்படி இருமொழி கொள்கை குறித்து வலியுறுத்தியதாக சொன்னாரோ, அதேபோல் அடுத்த முறை டெல்லி செல்லும் போது, ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா’ பிரச்சினை குறித்தும் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று பேசினார்.