சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உறுதியாக அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது துறை ரீதியான மானியக் கோரிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று (ஏப்ரல் 24) நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில், கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர்களான செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, சிந்தனை செல்வன், ராமச்சந்திரன், நாகை மாலி, சதன் திருமலை குமார், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன், அவை முனைவர், அவை தலைவர் என அனைவரும், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் ஓர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்று விதி எண் 55-ஐ பயன்படுத்த அறிவுறுத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் வளர்ந்து மேலோங்கி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உலகளவில் இன்றைக்கு பாராட்டப்படக் கூடிய நிலையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் காரணமாக இருந்தாலும், முக்கியமான தலைவர்களில் ஒருவராக முத்தமிழறிஞர் கலைஞர் விளங்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்க கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், ஜி.கே.மணி குறிப்பிட்டதை போல எந்த வித தயக்கமின்றி கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துகொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.