சென்னை: மாநிலத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தாலும், அவற்றை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் தமிழக அமைச்சரவை கூடி அவற்றுக்கு ஓப்புதல் அளிக்க வேண்டும். இதன்படி, தமிழக அமைச்சரவைக் கூட்டம், மாநில முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், " திமுக ஆட்சியில் தொழில்துறை, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று புதிய பரிணாமங்களில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 'தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025'-க்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது தான் இதன் முக்கிய இலக்காகும். குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விண்வெளி துறைக்கு தகுதியான, திறமை வாய்ந்த ஆட்களை உருவாக்குதல் இந்த கொள்கையின் முக்கிய அம்சமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 20 - வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @mp_saminathan pic.twitter.com/P3Zapx5Luu
— TN DIPR (@TNDIPRNEWS) April 17, 2025
உற்பத்தி துறையிலேயே நமது கவனம் பெரும்பாலும் இருக்கும் நிலையில், இந்த முறை விண்வெளி துறையை மையப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளோம். விண்வெளித் துறைக்கு உலக அளவில் உள்ள போட்டியில் தமிழகத்தின் பாய்ச்சலுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய வகையில் இந்த கொள்கை உள்ளது.
25 கோடி ரூபாய் அளவில் உள்ள சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் எலன் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் தான் எங்கேயோ இருக்கிறது என நினைத்து கொண்டிருக்கும் சூழலில் அவரின் நிறுவனத்துக்கு போட்டியாக நமது தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதையும படிங்க: விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனை! கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி - பதில் அளித்த தங்கம் தென்னரசு!
300 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு தொகுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 'ஸ்பேஸ் பே' என்று அறிவிக்கப்பட்டு அந்த இடங்களில் முதலீடுகள் வருமேயானால் அதற்கு சிறப்பு தொகுப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30%, இரண்டாம் ஆண்டு 20%, மூன்றாம் ஆண்டு 10% என்ற அளவில் ஊக்கத்தை இந்த விண்வெளிக் கொள்கை தருகிறது. ஒட்டுமொத்தமாக விண்வெளி என்ற புதிய துறையில் ஒரு பொன்னான நாள் இன்று.
இளம் தலைமுறையினருக்கு விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்களை உருவாக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு மாபெரும் அறிவிப்பாக விளங்கும். உலக அளவில் உள்ள விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள். தென்தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த கொள்கை வரப்பிரசாதமாக அமையும்.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்க 'ஸ்பேஸ் பே' என்ற முறையை கொண்டுவர உள்ளோம்." என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.