திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகர் 29 வது தெருவில் வசித்து வந்தவர் சஜி (எ) அந்தோணி சேவியர். இவர் நெல்லை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், கட்சி பணி நிமித்தமாக சென்னை சென்ற சஜி இன்று (மார்ச் 15) காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகள் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மறைந்த சஜி பல ஆண்டுகளாக விஜயின் தீவிர ரசிகராக இருந்து வந்தவர். இவர் நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். கடந்த 25 ஆண்டுகளாக சஜி நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக தென் மாவட்டத்தில் விஜயின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளில் முதலிடம் பிடித்தவர் சஜி. மதுரைக்கு தெற்கே நடிகர் விஜய் எந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் சஜியை அழைக்காமல் செல்ல மாட்டார்.
குறிப்பாக நடிகர் விஜய் கடந்த பல ஆண்டுகளாகவே கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மறைமுகமாக பல்வேறு உதவிகளை செய்து வந்தார். குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா உயிரிழந்த போது நள்ளிரவு திடீரென யாருக்கும் தெரியாமல் சென்று சஜி மாணவி குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது போன்ற நள்ளிரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் நடிகர் விஜய் தென்மாவட்டங்களில் பல இடங்களுக்கு செல்லும் போது உதவியாக சென்றுள்ளார். அப்போதெல்லாம் நடிகர் விஜய் சஜியை தான் அழைத்து செல்வாராம். குறிப்பாக இரவில் நடிகர் விஜய்க்கு சஜிதான் காரை ஓட்டி செல்வார் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு நடிகர் விஜய்யிடம் சஜி நெருக்கமாக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: சடலத்துக்கு மாலை போட்டு தாலி செயினை உருவிய நபர்; தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!
விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கியதும் மாவட்டச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். கட்சி தொடங்கிய பிறகும் நடிகர் விஜய்க்காக முழு நேரமும் சஜி தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக விஜய்யின் அரசியல் பயணத்தில் சஜி பெரிதும் உதவியாக இருந்து வந்தார். விஜய் பல்வேறு கட்டங்களாக மாவட்ட செயலாளர்களை அறிவித்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று (மார்ச் 15) மேலும் புதிய மாவட்ட செயலாளர்களை அறிவிப்பதாக இருந்தது.
இதற்காக கடந்த ஐந்து நாட்களாக சஜி சென்னையில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளை அறிவித்த போது சஜியை தனிப்பட்ட முறையில் அருகில் அழைத்து நீண்ட நேரம் அவருடன் தனியாக பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வரலாகி வருகிறது.
இது போன்று விஜய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்த சஜி, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் நேற்று இரவு தங்கிய நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஜியின் உடலை கொண்டு செல்ல நெல்லையில் இருந்து உறவினர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.