தேனி: கொலை வழக்கில் மூன்று இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த சூர்யா, தினேஷ், மதன் ஆகிய மூவரும் சேர்ந்து முன்பகை காரணமாக கடந்த 02.05.2021 அன்று அதே பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை அறிக்கை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கானது இன்று விசாரணை முடிவுற்று சாட்சிகளின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால் மூவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
மூன்று இளைஞர்களுக்கும் ஆயுள் தண்டனையும், முதல் குற்றவாளியான சூர்யாவிற்கு 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளிகளுக்கு தலா 6000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் நான்கு மாத காலம் சிறை தண்டனையையும் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரையும் சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.கொலை வழக்கில் மூன்று இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் தேனி நீதிமன்றம் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.