கொல்கத்தா: தனியார் ஹோட்டலில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஜோதிவடம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப் பொருட்களை வைத்து தயாராகும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பள்ளி கோடை விடுமுறை என்பதால் பிரபு, தனது மனைவி மற்றும் குழந்தைகள் தியா (10), ரிதன் (3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள படா பஜார் பகுதியில் உள்ள ரித்துராஜ் என்ற நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர். நேற்று இரவு (ஏப்.29) குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகே உள்ள உணவகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென்று ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர தீ விபத்தில் பிரபுவின் இரண்டு குழந்தைகளும், அவரது மாமனார் முத்துகிருஷ்ணனும் தீயில் கருகி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மூவரின் உடல்கள் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கரூர் உப்பிடமங்கலம் கிராமத்தில் உள்ள பிரபுவின் உறவினர்கள் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஹோட்டலில் உள்ள 5 தளங்களில், மொத்தம் 42 அறைகள் உள்ளதாகவும், அதில் 88 பேர் வரை தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.