தூத்துக்குடி: கோவில்பட்டியில் வெவ்வேறு மூன்று சம்பவங்களில் சுமார் 40 கிலோ வரை கஞ்சா பிடிபட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து, சொகுசு கார்களில் கைமாற்றப்படுவதாகக் கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் சின்னா பீர் முகம்மது, எஸ்.ஐ. செந்தில் வேல்முருகன், தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செஸ்லின் வினோத், கழுகாசல மூர்த்தி ஆகியோர் கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த கண்காணிப்பு பணியின் போது, நேற்று (ஏப்ரல் 27) ஞாயிற்றுக்கிழமை மாலை மூப்பன்பட்டி சுடுகாடு அருகே போலீசாரை பார்த்ததும் சிலர் காரில் இருந்து இறங்கித் தப்பி ஓடினர். இதைப் பார்த்துச் சந்தேகமடைந்த காவலர்கள், அவர்களைத் துரத்திச் சென்று பிடித்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த அருண்குமார் (23), நாகலாபுரத்தைச் சேர்ந்த கொம்பையா (21), வ.உ.சி. நகரைச் சேர்ந்த கார்த்திக் (20), கயத்தாறு தெற்கு கோனார் கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா பொட்டலங்களை மூப்பன்பட்டி சுடுகாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்து ரீ பேக்கிங் செய்து கார் மூலம் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்ததை 4 பேரும் ஒப்புக் கொண்ட நிலையில் அவர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கார் டிக்கியில் பதுக்கி வைக்கத்திருந்த 23 கிலோ 720 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தில் சம்பவம் பின் யார் இருக்கிறார்? கடத்திக் கொண்டு எங்குச் செல்ல இருந்தனர்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் கைது: இதேபோல், கோவில்பட்டி பாரதி நகர்ப் பகுதியில் எஸ்.பி. சிறப்புக் குழு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாரதி நகரைச் சேர்ந்த கரண் குமார் (25), வ.உ.சி. நகரைச் சேர்ந்த சங்கர நாராயணன் (26) ஆகிய இருவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சிவகங்கை அருகே திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை; பின்னணி என்ன? |
இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை கைது போலீசார் செய்து அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தற்போது மேலும் சம்பவங்களில் 25 கிலோ கஞ்சாவையும் 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.