சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விசிகவின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் இன்று கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2025 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகளை அவர் அறிவித்தார்.
அதில், அம்பேத்கர் சுடர் விருது - முனைவர் கே.எஸ். சலம் (துணை வேந்தர் திராவிடப் பல்கலைகழகம்), பெரியார் ஒளி விருது - சத்தியராஜ் (நடிகர்), மார்க்ஸ் மாமணி விருது - தியாகு (தமிழ் தேசிய விடுதலை கழக பொதுச்செயலாளர்), காமராஜர் விருது - வைத்திலிங்கம் எம்பி (முன்னாள் முதல்வர், புதுச்சேரி), அயோத்திதாசர் ஆதவன் விருது - ஜம்புலிங்கம் (பௌத்த ஆய்வறிஞர்), காயிதேமில்லத் பிறை விருது - காஜா மொய்னுதீன் பாகவி (தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை), செம்மொழி ஞாயிறு விருது - பேராசிரியர் சண்முகதாஸ் (தமிழறிஞர், இலங்கை) ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், '' காஷ்மீரில் நடந்த படுகொலை பயங்கரவாத தாக்குதல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து இதை தடுக்க இந்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அமைதி நிலவுகிறது என்றும் பயங்கர வாதத்தை ஒழித்து விட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். இந்திய அரசமைப்பின் 370வது பிரிவை மாற்றி ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டதாக மகிழ்ந்தார். ஆனால், அங்கே பயங்கரவாதம் தொடரும் என்பதை தான் இந்த கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.
'அரசியல் கருத்தல்ல'
இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி கருத்து சொல்லும் போது இந்திய ஒன்றிய அரசின் உளவுத்துறை, பாதுகாப்புத்துறை தோல்வி அடைந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். அதேபோல இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக கேட்டுக் கொள்கிறது. இது அரசியல் கருத்தல்ல.
பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில் அந்த பகுதிக்கு நேரில் சென்று இருந்தால் ஆறுதலாக இருந்து இருக்கும். இதை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். சத்தீஸ்கரில் கடந்த ஒரு மாதமாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் என்று சொல்லி பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் ஏராளமான ஆதிவாசிகள், பழங்குடியினர் கொல்லப்படுகிறார்கள். இதை நிறுத்திவிட்டு மாவோயிஸ்ட் படை தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது.
'எப்படி ஒற்றுமை நிலவும்?'
இந்தியாவில் அமைதியின்மை நிலவுவதற்கு இந்திய ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நாள்தோறும் மக்களை பிரிக்கும் செயலில் தேர்தல் ஆதாயத்திற்காக சிருபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து கொண்டு இருந்தால் எப்படி ஒற்றுமை நிலவும்?'' என்றார்.
கலைஞர் பெயரில் பல்கலைகழகம் வர இருக்கிறது என்ற அறிவிப்புக்கு விசிக வரவேற்கிறது என்ற திருமாவளவன், '' கலைஞர் மொழியியல் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று 2021 ஆகஸ்ட் மாதம் விசிக வேண்டுகோள் வைத்தது. இன்று பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதை வரவேற்கிறது. அது மொழியியல் பல்கலைக்கழகமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
மாபெரும் பேரணி
விசிக சார்பில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை திருச்சியில் நடத்த உள்ளோம். கல்வி நிறுவனங்களில் சாதிய அரசியல் பரவுகிறது. இளம் பிஞ்சுகள் இடத்தில் சாதியம் சேர்க்கப்படுகிறது. நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவர முன்வர வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசியல் கட்சிகள் கொடியை அகற்ற சொல்லி இருப்பது ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நசுக்குவது போன்றது. எந்த வகையிலும் இதை ஏற்க முடியாது. தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும், விசிக சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது'' என்றார்.
துணைவேந்தர் மாநாடு
தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர் மாநாட்டை ஆளுநர் கூட்டி இருப்பது தொடர்பான கேள்விக்கு, '' துணைவேந்தர் மாநாடு நடத்துகிறோம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பதட்டத்தை உருவாக்க திட்டமிடுகிறார். துணைவேந்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிரான முடிவை துணை வேந்தர் எடுக்க முடியுமா?. ஆளுநருக்கும், முதல்வருக்கும் பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் ஆளுநர் அழைக்கும் பொழுது துணைவேந்தர்கள் அந்த கூட்டத்திற்கு செல்வதா? வேண்டாமா? என்று அழுத்தம் ஏற்படும்.
ஆளுநர் இந்த மாநாட்டை கைவிட வேண்டும். இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது ஏற்புடையதல்ல. இந்த நிகழ்ச்சியை அவர் தவிர்க்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது'' என அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்