சென்னை: அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவில் மாற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் மூலம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, என்னிடம் ரூ.30 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் என்பதால், அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,"என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு போதிய நேரம் இல்லை எனத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகின்றோம்,"எனக் கூறியது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உ்த்தரவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது," என திட்டவட்டமாக கூறினார். மேலும், காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.