தூத்துக்குடி: கோயிலாக நினைக்கும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கே இடம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அன்றைய தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் தம்பிதுரை உள்ளிட்டோருடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைப்பது குறித்தும் பேசியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
எல்லாம் நன்மைக்கே: இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் அவரிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்,‘எல்லாம் நன்மைக்கே’ என்று மட்டும் கூறிவிட்டு பேரவைக்குள் சென்றார். சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சென்று ஓபிஎஸ் சாமி தரிசனம் செய்தார்.
டெல்லியில் இருந்து நேற்று திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்ப என்னவேண்டுமானாலும் மாறுபடும். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்,"என்றார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமி, காரில் திருநெல்வேலி சென்று அங்கு கருப்பசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கோரிக்கைகள் வலியுறுத்தல்:பின்னர், மீண்டும் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "டெல்லியில் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நிதி இன்னும் வரவில்லை. அதனை தாமதமின்றி வழங்கக் கோரியும் மனு அளித்துள்ளோம். மேலும் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம்.
இதையும் படிங்க:“அதிமுக உடன் கூட்டணிக்கு சென்றவர்கள் கை சேதமடைந்து நிற்கின்றனர்”- ஜவாஹிருல்லா காட்டம்!
அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் ஓபிஎஸ். எனவே ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான். அவர்களை ஒரு போதும் மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. கோயில் போல கருதும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை கட்சியில் சேர்க்க முடியாது.
தகுதியற்றவர்: ஓபிஎஸ் அதிமுகவில் இருப்பதற்கே தகுதி அற்றவர். அவரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை ஒரு போதும் எதிரிகளிடம் அடகு வைக்க மாட்டோம். எங்களை டெல்லி மேலிடம் மிரட்டுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். நாங்கள் ஆட்சியில் இல்லாத போது எங்களை யாரும் மிரட்டவோ, உருட்டவோ வழி இல்லை. திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல.
ஒரு மித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். தேர்தலின் போது அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கப்படும். டாஸ்மாக் மதுபான ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அமலாக்கத்துறை உள்ளது. யார் குற்றம் செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.