திருநெல்வேலி: சக மாணவரால் அரிவாளால் வெட்டப்படு பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்ற முயற்சிப்பதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு மாணவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவரை தடுக்கச் சென்ற ஆசிரியையும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை நிஜாமுதீன், தாய் சையது ஜாஸ்மின் உஷானா ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், "என் மகன் சக மாணவருடன் மோதல் போக்கில் ஈடுபடவில்லை. இப்படி இருக்கும் நிலையில் என் மகனை அரிவாளால் வெட்டும் அளவிற்கு சக மாணவர் துணிந்தது ஏன்? இந்த சம்பவத்துக்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்றும் தெரியவில்லை. என் மகனை வெட்டிய மாணவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல படுகாயம் அடைந்த என் மகனுக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்,"என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறுவது பொய்'- அமலாக்கத் துறை வாதம்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவரின் தந்தை நிஜாமுதீன்,"என் மகன் சக மாணவரால் தலை கை உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் முழுமையாக குணம் அடையாத நிலையில் தற்போது திரவ உணவை மட்டுமே சாப்பிடுகிறார்.
மேலும் என் மகன் நடந்த சம்பவத்தை நினைத்து தினமும் அச்சப்பட்டு கொண்டிருக்கிறார். அவரால் பேசக் கூட முடியவில்லை. தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று மட்டும் மூன்று முறை என் மகனை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். அரசு சார்பில் எங்களது குடும்பத்திற்கு உதவுவதுடன் எனது மகனின் படிப்புக்கும் உதவி செய்ய வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் முழுமையாக சிகிச்சை அளிக்காமல் மகனை வெளியேற்ற நினைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்,"என்றார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர், அவரது பெற்றோர் ஆகியோரை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரசூல் மைதீன்,"பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் மாணவரை இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் யாரும் சந்தித்து பேசவில்லை. வெட்டுப்பட்ட மாணவர், தனியார் மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காமல் மாணவரை டிஸ்சார்ஜ் செய்யும்படி பெற்றோரை வற்புறுத்துகின்றனர்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.