சென்னை: அமெரிக்காவில் உள்ள அணுவுக்கு அப்பால் (BEYOND NUCLEAR) என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான அணுசக்தி இல்லா எதிர்காலத்துக்கான எதிர்ப்பு விருதுக்கு (Nuclear Free future award for resistance) தமிழ்நாட்டின் அணு எதிர்ப்பு போராளியான சுப.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த மார்ச் 4ஆம் தேதி விருது வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில் அந்த அமைப்புக்கு சுப.உதயகுமார் எழுதியுள்ள கடிதத்தில், "விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் என்னால் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. எனவே, என்னுடைய மகன்கள் எனது சார்பில் அந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நீங்கள் (BEYOND NUCLEAR) அனுப்பிய மின்னஞ்சலில் என்னுடைய வங்கி கணக்கு விவரங்கள் கேட்டிருந்தீர்கள். விருதுடன் பரிசு தொகைக்கான 5000 அமெரிக்க டாலர் என்னுடைய வங்கி கணக்குக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் எனது அத்தனை வங்கிக் கணக்குகளும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அணு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக எந்த வழியாகவும் என்னால் வெளிநாட்டு நிதியைப் பெற இயலாது.
இதையும் படிங்க: நெல்லை டூ செங்கோட்டை ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!
இதன் காரணமாக கூடங்குளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, என் சார்பில் அந்த குழு 5000 டாலர் நிதியைப் பெற்று நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், வங்கி அதிகாரிகள், தணிக்கையாளர்கள் ஆகியோர், 'வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு இப்போது மத்திய அரசு கடும் நிபந்தனைகளை விதித்திருப்பதால், இந்த பரிசு தொகையை பெறுவது ஏறக்குறைய சாத்தியமில்லை' என்று தெரிவித்தனர். இந்த சூழல் காரணமாக என்னால் பரிசு தொகையை ஏற்க இயலாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி,"என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.