தென்காசி: நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கத்தை தொடங்கியதால், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்), ரயில் கார்டு (Train Guard) ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் செல்வதற்கு ரயில் வசதி இல்லாததை கருத்தில் கொண்டு, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களுக்காக இந்த சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, வண்டி எண் (06030) நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் ஜூன் 1 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30க்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

அதுவே, மறு மார்க்கத்தில் வண்டி எண் (06029) மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்நிலையில், நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளதால் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்கள், ரயில் கார்டு ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே பாண்டியன், ரயில் பயணிகள் சங்க செயலாளர் ஜெகன், துணைச் செயலாளர் தினேஷ், நிர்வாகிகள் சேர்ம ராஜா, காசி பாண்டியன், பிச்சையா மற்றும் பொதுமக்கள், பயணிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கி வரும் நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.