திருநெல்வேலி: இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தனது தந்தையிடம் ஆசையாக செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, கல்லூரி மாணவி தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த சம்பவம் மானூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் தானம் செய்ததால், அவரது உடல் அரசு மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மாவடியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் குஜராத்தில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், திருமணமாக இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். அதில், மூத்த மகள் கலைச்செல்வி (வயது 19) பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியூரில் உள்ள தனது தந்தையிடம் மொட்டை மாடியில் நடந்து கொண்டே செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட உறவினர்கள், சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று (ஏப்ரல் 6) மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால், உயிரிழந்த மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முன் வந்தனர். அந்த வகையில், நேற்று அவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கருவிழிகள் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: தஞ்சையில் பூட்டிய வீட்டிற்குள் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த பெண் ஆயுதப்படை காவலர்! என்ன நடந்தது? |
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த கலைச்செல்வியின் உடலுக்கு அரசு மருத்துவமனை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதில், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடினமான சூழலிலும் கலைச்செல்வியின் பெற்றோர்கள், உடல் உறுப்புகள் மூலம் வேறு எங்காவது தனது மகள் பல ஆண்டுகள் வாழ்வார் என உறுப்பு தானம் செய்யப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் இறந்த பின்பு, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில், விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பவர்களின் உறுப்பு தானம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி, இறந்த பிறகு அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.