சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல ஜாக்பாட் அறிவிப்புகளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 110-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின் போது, சட்டசபை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1) கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல் செயல்படுத்துமாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று,ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
2) 01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
3) அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் ரூ.10,000 பண்டிகை கால முன்பணம் தற்போது ரூ.20,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
4) அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம், இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
5) பெண் அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரமாவும், ஆண் அரசு ஊழியயர்களுக்கு ரூ.6 ஆயிரமாகவும் இதுவரை திருமண முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. இது, தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.
6) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 500-இலிருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும்.இதன் மூலம் சுமார் 4 லட்சத்து 71 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
7) ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
8) பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அண்மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்படும்.
9) திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு 9 மாத காலமாக இருந்த மகப்பேறு விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி, அந்த மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.