விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-இல் விதி 15-ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-இல் விதி 42 B-யின் படி தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-இன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகையில் வைக்கப்பட வேண்டும். மேலும், நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, அனைத்து தமிழ்நாடு கடைகள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர்.

இக்குழுவினர் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் ‘தமிழ்’ பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, விழிப்புணர்வினை ஏற்படுத்தி 2025 மே 15-ஆம் தேதிக்குள் நூறு சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 2025 மே 15 வரை பிற மொழி பெயர் பலகைகளை மாற்றி, தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவித்து தமிழ் பெயர் பலகைகள் 100 விழுக்காடு அமைத்திடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்,” என ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ.மீனாட்சி, துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் செ.பர்வதம், உதவி இயக்குநர் (நில அளவை) ஜெயசங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.