சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழலை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து, அனைத்து துறைகளின் சார்பாக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர்கல்வித் துறையில் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் கல்வியினை வழங்கி வருகிறது.
பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின்போது நிலுவைப் பாடங்கள் (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: '2925 கி.மீ தூரத்துக்கு வாய்க்கால்கள் தூர் வார ரூ.13.80 கோடி' - வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
இதுகுறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும்.' என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின்போது அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதியால் 43 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தற்பொழுது அளிக்கப்பட்டுள்ள அனுமதியால் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.