சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தி உள்ளது, என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 06 முதல் 08-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
இதனிடையே, டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு இன்று (ஏப்ரல் 08) விசாரணைக்கு பட்டியலிடபட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேணடும்," என கோரிக்கை வைக்கபட்டது.
அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்சநீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம். இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தி உள்ளீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும். இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யபட்டதா?," என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு! சென்னையில் விலை எவ்வளவு?
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழ்நாடு அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது," என தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதிகள், "உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகலில் தமிழ்நாடு அரசு வாதங்களை முன் வைக்கலாம்," என்றனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், "இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம்," என்று நீதிபதிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், "அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கை தொடர்ந்து நடத்துவதா? திரும்ப பெறுவதா? என்பது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.