சென்னை: தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிப்பதை தடுக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று (ஏப்ரல் 26) தாக்கல் செய்தார்.
சட்ட முன்வடிவின் முக்கியத்துவம்
அதில், ''தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை இந்த சட்ட திருத்த மசோதா பாதுகாக்கும்.
கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. மீறுபவர்கள் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை
வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளி வர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
மருத்துவக் கழிவுகளை கொட்டும் விவகாரம்
இதே போல, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ள சாராயக்காரர்கள், கணினி குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள், காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக சட்டம் முன் வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
மேலும் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது, பொது சுகாதாரத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தும் கழிவுகள் அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்தில் கொட்டப்படுவது என தொடர் புகார்கள் வருகிறது. உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட முன்வடிவின் முக்கியத்துவம்
அதில், ''கள்ளச்சாராயக்காரர்கள், கணினி குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக்காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும்.
இந்த சட்ட முன்வடிவின் படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்