சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை 9.30 மணிக்கு சட்டப் பேரவையில் தாக்கல் செய்து பேசினார். இன்று தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ''தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநில பகுதிகள் மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளில் உள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களில் 2925 கி.மீ நீளத்துக்கு ரூ.13.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.'' என்று பேசினார்.
தமிழ்நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்களை அப்புறப்படுத்தி நீர் தடை இல்லாமல் பாசனத்துக்கு செல்லும் விதமாக ஆண்டுதோறும் நீர்வளத் துறை சார்பில் நீர்நிலைகள் தூர் வாரப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு நீர்வளத் துறை வரலாற்றில் தொழில்நுட்ப வசதியை கொண்டு தூர் வாரும் பணியை அதிகாரிகள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) என்கிற செயலி கடந்த 2023 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எந்தெந்த நீர்நிலைகளில், தூர் வாரும் பணி எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கிறது? என்கிற விவரம் இடம் பெற்றிருக்கும். மேலும் தூர் வாரும் முன்பாக அந்த இடத்தின் புகைப்படம், தூர்வாரிய பிறகு அந்த இடத்தின் புகைப்படம் ஆகியவற்றை தினமும் நீர்வள துறை அலுவலர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.
இப்படிப்பட்ட வசதிகள் இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் இருப்பதால் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், கோடை காலங்களில் கால்வாய் மூலமாக நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பட்ஜெட்டில் ரூ.1.60 கோடி நிதி' - 'மதுரை மல்லி'க்கான சிறப்பான அறிவிப்பு!
இந்நிலையில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ரூ.68 கோடியில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பில் நீர்வடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் உள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களில் 2925 கி.மீ தூரத்துக்கு தூர்வாரும் பணிகள் ரூ.13.80 கோடி மதிப்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் 7 மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.