ETV Bharat / state

பயிர்களை தாக்கும் மக்காச்சோள படைப்புழு.. பாதிப்பை தடுப்பது எப்படி? - வேளாண் வல்லுநர் கூறும் ஆலோசனைகள்! - fall armyworm control measures

fall armyworm control measures: இந்தியாவின் அதிகப்படியான பயிர்கள் இந்த மக்காச்சோள படைப்புழுவின் தாக்குதல் காரணமாக சேதமடைந்து வரும் நிலையில், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சேதத்தை தவிர்க்கலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு துறை இயக்குனர் சாந்தி கூறியுள்ளார்.

மக்காச்சோள படைப்புழு, மக்காச்சோளம்(கோப்புப் படம்)
மக்காச்சோள படைப்புழு, மக்காச்சோளம்(கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 26, 2024 at 1:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், விவசாயத்தை ஊக்குவிக்க அரசால் பல்வேறு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கையில் விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளதாகவும், 32 தோட்டக் கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அறிவித்திருந்தனர். மேலும், இதற்கென வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர், புழுக்களின் தாக்கம் போன்றவற்றால் எதிர்பாராத இழப்புகள் ஏற்படும் போது கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேசத்தில் பரவி உள்ள ராணுவ புழு எனப்படும் மக்காச்சோள படைப்புழுவால் அங்குள்ள விவசாயிகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த படைப்புழுவால் மக்காச்சோள விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வருவதால் செய்வதறியாது விவசாயிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ளா தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு துறை இயக்குநர் சாந்தி ஈடிவி பாரத் வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஆரம்பத்திலேயே கண்டறிதல்: தானியங்களின் ராணி என்று கருதப்படும் மக்காச்சோளம் உலகெங்கிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவில் 90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி திறனுடன் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 3.2 லட்சம் பரப்பளவில் 25.9 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அதிகமான மக்காச்சோளம் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மக்காச்சோள படைப்புழு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மக்காச்சோள படைப்புழு உலகெங்கிலும் மக்காச்சோளம் மட்டுமின்றி 180 வகையான பயிர்களை தாக்கி சேதத்தை உண்டாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சில பயிர்களே குறைந்த அளவில் படைப்புழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த மக்காச்சோள படைப்புழுவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சேதத்தை தவிர்க்க முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பார்த்தால், மக்காச்சோளத்தை தவிர வேறு பயிர்களிலும் படை புழுக்கள் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆய்வில் இந்த புழுக்கள் 10 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தோராயமாக ஏக்கருக்கு 2,000 முதல் 2,500 கிலோ வரை மகசூல் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்காச்சோளம் வடை புழுக்கள் நான்கு விதமான பருவ நிலைகளில் உள்ளது. அதில் பெண் புழுக்கள் தனது வாழ்நாளில் 1,000-1,500 முட்டைகள் வரை இடுகின்றன. இதில் ஆறு நிலைகள் உள்ள நிலையில், ஐந்து மற்றும் ஆறாம் நிலைகளில் புழுக்கள் பெருமளவு சேதத்தை ஏற்படுத்துகிறது.

படைப்புழு
படைப்புழு (Credits - TNAU)

1500 கி.மீ தூரம் பறக்கும் புழு?: இந்த புழுக்களின் வாழ்நாள் 30 முதல் 35 நாட்களில் முடித்துக் கொள்வதால் 10 முதல் 12 தலைமுறைகள் இதன் மூலம் உருவாகின்றன. மேலும், இந்த புழுக்கள் ஒரே நேரத்தில் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கக்கூடியவை. இதுவே, இந்த வகையான பூச்சிகள் உலகெங்கும் காணப்படுவதற்கு முக்கிய காரணம்.

படைப்புழுவை தடுப்பது எப்படி? இப்புழுக்கள் மக்காச்சோளத்தின் அனைத்து நிலைகளையும் தாக்கி சேதத்தை உண்டாக்கக் கூடியவை. மேலும், இறுதி உழவின் போது வேப்பம் புண்ணாக்கை ஏக்கருக்கு 100 கிலோ இடுவதால் மண் வளம் அதிகரிப்பதோடு, கூடுகளாக இருக்கும் இந்த புழுக்கள் உருவாவதை ஓரளவு தடுக்கலாம்.

அதேபோல், சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம், தயோமீத்தாக்சம் 19.8 சதவீதம், 1 கிலோ விதைக்கு 4 மிலி என்றளவில் விதை நேர்த்தி செய்யலாம், தட்டை பயிர், எள், சூரியகாந்தியைச் சுற்றிலும் பயிரிட்டால் தாக்கத்தை குறைக்க முடியும். அதைத் தவிர இனக்கவர்ச்சி பொறிகளை வைப்பதன் மூலமாக பயிர் முளைத்த 15 - 20 நாட்களில் ஏக்கருக்கு 60 மில்லி லிட்டர் ளோராண்ட்ரினிலிபுரோஸ், 18.5 எஸ்.சி அல்லது அசாடிராக்டின் 1500 பிபிஎம் தெளிக்க வேண்டும்.

பயிரிடும் பருவத்தின் ஆரம்ப நிலையில் டெலினோமஸ் ரீமஸ் என்ற பொருளை இந்த புழுக்களின் முட்டை ஒற்றுமையை தடுக்க ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் விடுவது சிறந்த பலன் அளிக்கிறது. மேலும், பயிர் முளைத்த 30-40 நாட்களில் 100 கிர எமாமெக்டின் பென்சோயேட் 5 SG அல்லது மில்லி நொவலுரான் 10 சதவீதம் EC அல்லது ஸ்பைனிடிரோம் 11.70 SC அல்லது மெட்டாரைசியம் அனைசோபிலியே (TNAU-Ma-GDU) ஏக்கருக்கு ஒரு கிலோ என்றளவில் தெளிக்க வேண்டும்.

அதேபோல் ஸ்பைனிடிரோம் 11.70 SC அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 SG இவற்றுள் ஏதேனும் ஒன்றினை பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால் தெளிப்பது நல்லது" என ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் கடல் இளவரசி.. மீனவப் பெண் டூ தொழில்முனைவோர்.. திரும்பி பார்க்க வைத்த சுபிக்‌ஷா!