சென்னை: சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், "எனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
சாதி மற்றும் மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சந்தோஷ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என் செந்தில் குமார் அடங்கிய அமர்வு, ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் வட்டாட்சியர்கள் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்கள் வழங்கி இருப்பதாக சுட்டிக் காட்டினர். எனவே, மனுதாரருக்கு அது போல் சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், சாதிய ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் என பலரும் போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சாதி மற்றும் மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தனர்.
நாட்டில் நிலவும் சாதி மத பாகுபாடுகளை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என் செந்தில் குமார் அடங்கிய அமர்வு, அரசியல் சாசனம் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதிலும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.