சென்னை: கோடை வெயில் கொளுத்தும் நிலையில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை நாளை (ஏப்ரல் 19) முதல் ஏசி ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முதல் முறையாக புறநகர் ஏசி ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, 12 பெட்டிகளை கொண்ட புறநகர் ஏசி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் திட்டமிடப்பட்டது. இதையடுத்து சென்னையின் முதல் 12 பெட்டிகள் கொண்ட குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணி நிறைவு பெற்று அதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்களுக்கான அட்டவணை, நிறுத்தங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுமதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது.
இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் குளிர்சாதன மின்சார ரயில்கள் நாளை முதல் (ஏப்ரல் 19) இயக்கப்பட உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரயில் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது.
ரயில் எண்: 49003
காலை 7 மணிக்கு இயக்கப்படும் குளிர்சாதன மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுர் வழியாக காலை 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடையும்.
ரயில் எண்: 49004
காலை 9 மணிக்கு இயக்கப்படும் குளிர்சாதன மின்சார ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் வழியாக காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும்.
ரயில் எண்: 49005
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு கிளம்பி மேற்கண்ட தடங்கள் வழியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 5.25 மணிக்கு வந்தடையும்.
ரயில் எண்: 49006
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு கிளம்பி மேற்கண்ட தடங்கள் வழியாக இரவு 7.15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும்.
ரயில் எண்: 49001
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு கிளம்பி சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்தடையும்.
ரயில் எண்: 49002
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 45 மணிக்கு கிளம்பி தாம்பரம், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 6.45 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தெற்கு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ''கைதிகள் பரோல் கேட்டு இனி அலைய வேண்டாம்'' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அதிலும் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லை என்றால், மக்கள் எந்த அளவுக்கு சிரமத்தை அனுபவிக்க நேரிடும்? என்று நினைத்து பார்க்கவே முடியாது.
இந்த நிலையில் தற்போது கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை குளிர்சாதன மின்சார ரயில்களின் சேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்