சென்னை: கோடை விடுமுறையில் ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, ஏற்கனவே விடப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் சேவையை நீடித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. அரசு விடும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை நம்பியே இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களிலும், பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைகளை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06012), மே 11 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கூடுதலாக 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மறு மார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06011), மே 12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:'பென்சில் பிரச்சனை'க்கு அரிவாள் வெட்டு... போர்க்களமான வகுப்பறை! நெல்லை சம்பவத்தின் பின்னணி என்ன? |
தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு இடையே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06035), மே 9 முதல் 30ஆம் தேதி வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06036), மே 11 முதல் ஜூன் 1 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06030), மே 11 முதல் ஜூன் 1 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம் - நெல்லை இடையே திங்கள்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06029), மே 12 முதல் ஜூன் 2 வரை மேலும் 4 வாரங்கள் நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்