தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, ஆடுதுறை எஸ்.எம்.எஸ். கார்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா (40). இந்த தம்பதியின் மகன்கள் அருண்குமார் (18), அன்புக்கரசன் (15) மற்றும் மகள் ஐஸ்வர்யா (10). கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலினுக்கும், பிருந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிருந்தா குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலையில் வசிக்கும் தனது தந்தை குணசேகரன், தாயார் உமா வீட்டிற்கு மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். மகன்கள் இருவரும் தந்தை ஸ்டாலினுடன் இருந்தனர்.
இந்நிலையில் ஸ்டாலினின் உறவினர்கள் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண்ணை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதற்கிடையே ஸ்டாலின் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஸ்டாலின் இறந்த நிலையில், தனது மகன்களுடன் சேர்ந்து வாழ பிருந்தா முடிவு செய்தார். தற்போது இரண்டாவது மனைவி உள்ள நிலையில் பிருந்தா எடுத்த முடிவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் காரணமாக இரண்டாவதாக திருமணம் செய்த உமா மகேஸ்வரி தனது பிறந்த ஊரான திருநாகேஸ்வரம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிருந்தா தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஆடுதுறையில் உள்ள எஸ்.எம்.எஸ்.நகர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மூத்த மகன் அருண்குமார் இருந்துள்ளார். அப்போது அவர், ''எங்களை சிறிய வயதில் ஏன் விட்டு விட்டு சென்றீர்கள்? தற்போது ஏன் வந்துள்ளீர்கள்?" என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில் அவரது உறவினர்கள் தலையிட்டு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க சமரசம் பேசியுள்ளனர். நேற்று (ஏப்ரல் 28) காலை முதல் மீண்டும் மூத்த மகன் அருண்குமார் மற்றும் தாய் பிருந்தா ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து வந்து தாய் பிருந்தாவின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ''புதிய போப் தேர்வு செய்வது எப்போது தெரியுமா?'' - வெளியானது அறிவிப்பு!
இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த பிருந்தா உயிருக்கு போராடினார். ஆனாலும் அருண்குமார் விடாமல் பிருந்தாவின் கழுத்தில் தனது காலால் நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தினர்.
தகவலறிந்து டிஎஸ்பி ராஜு, காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்