சிவகங்கை: சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர், பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 27) பிரவீன் குமார் சாமியார் பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான தோப்பில் இருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டிவிட்டு, தப்பிச் சென்றுள்ளது.
அதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் விரைந்து வந்த சிவகங்கை போலீசார், காயமடைந்த பிரவீனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிரவீன் குமாரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்ட பொறுப்பில் இருந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கொலையைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரவீன் குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மானாமதுரை - சிவகங்கை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழப்பு! |
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை நகர காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கக் கோரி பிரவீன் குமார் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், நேற்று மாலை சிவகங்கை அரசு மருத்துவமனை வெளியே பரபரப்பு நிலவியது. பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகர காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்து இருக்கலாம் எனவும், தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாமியார் பட்டி கண்மாய் பகுதியில் மூன்று பேர் வாளுடன் செல்வதைக் கண்ட தனிப்படை போலீசார், அவர்களை துரத்திப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் சாமியார்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் (எ) விக்கி(20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(19), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு(21) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த பிரவீனும், விக்கியும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஏப்ரல் 17ஆம் தேதி ஒரு பெண்ணை தாக்கியதாக விக்கியின் தம்பி தனுஷ்ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும், தனது தம்பி மீது வழக்குப் பதிவு செய்ய அப்பெண்ணின் உறவினரான பிரவீன் தான் தூண்டியுள்ளார் என எண்ணி, நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.