சென்னை: பட்டியல் இன மக்கள் வாழும் பகுதி இனி ’காலனி’ என அழைக்கப்படாது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, அக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன், ”தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு பதவி உயர்விலும் பயன்படுத்தப்படுவதால், பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் அரசு பணியிடங்களில் பதவி கீழிறக்கம் (depromotion) நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வரும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த சட்ட திருத்தம் நீதிமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கும் அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பணியாளர்களுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை பாதுகாப்பது என தமிழ்நாடு அரசு உறுதி செய்து அதற்கான வரலாற்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
’சொல்’ என்பது வெறும் குறியீடு அல்ல அது ஒரு சமூகத்தின் கருத்து நிலையை குறிப்பது. ஒரு காலத்தில் ’கற்பு’ என்ற சொல் பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அடிப்படையில் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். அது பாலியல் வன்முறை என்று இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.
வசைச் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்ட பல சொற்கள் இன்று மாற்றப்பட்டு திருநங்கையர், மூன்றாம் பாலினத்தவர்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊனமுற்றவரை குறிப்பதற்கு ’ஊனம்’ என்ற அடிப்படையில் இழிவுபடுத்தக் கூடாது என்று ’மாற்றுத்திறனாளி’ என்ற சொல் உருவாக்கப்பட்டது.
இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களை ’காலனி’ என்று சொல்லுகிற வகையில் அவர்களின் குடியிருப்புகளை ஒரு இழி சொல்லால் அடையாளப்படுத்துகிற நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்நாட்டில் 50 ஆண்டுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டினோம். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வரலாற்று சிறப்பு வாய்ந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களே.. இனி இரவில் கூட தனியாக போகலாம்.. களமிறங்கிய 'அயன் மேன்'!
‘காலனி’ என்ற சொல் இனி எந்த அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தப்படாது. அது அரசால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதியை ’காலனி’ என்ற சொல்லால் அழைக்கக் கூடாது என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த அறிவிப்பை தந்திருக்கிறார். முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை பதிவு செய்கிறோம். அனைவரையும் உள்ளடக்கிய அரசு என்ற முதலமைச்சரின் கூற்றை இந்த அறிவிப்புகள் மெய்ப்பிக்கிறது” என்றார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.