சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. இந்நிலையில் இன்று (மார்ச் 28) தமிழக வனத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, ''மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இன்டர்வென்ஷனல் இருதய சிகிச்சை நிபுணரை நியமிக்க அரசு ஆவண செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இன்டர்வென்ஷனல் இருதய சிகிச்சை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இருதவியல் துறையில் 1 உதவி பேராசிரியர், 1 இணை பேராசிரியர் என இருவரும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதே போல கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.7 கோடியே 99 லட்சம் செலவில் கேத்லக்கருவி, ரூ.2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் நெஞ்சக மருத்துவ பிரிவு கட்டடம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 12 வயது வரையிலான 54 குழந்தைகளுக்கு இன்டர்வென்ஷனல் சிகிச்சை முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 9 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இருதய சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது." என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் மீண்டும் பேசிய செல்லூர் ராஜு, ''12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை போல நான் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் பதில் வந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்டி மருத்துவ நிபுணர் உள்ளார். அதுபோல ராஜாஜி மருத்துவமனையில் போட வேண்டும்.
இதையும் படிங்க: சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் 'சஸ்பெண்ட்' - சபாநாயகர் உத்தரவு!
மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அருகாமையில் குழந்தைகள் நலத்துறைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 20 கோடி ஒதுக்கப்பட்டு அதில் தரைதளம், இரண்டு தளங்கள் கட்டுவதாக இருக்கிறது.
பழைய குழந்தைகள் பிரிவில் படுக்கை வசதி அனைத்தும் உள்ளது. இதை அங்கு கொண்டு செல்லும்போது சிரமமாக இருக்கும். எனவே கூடுதலாக மூன்றடுக்கு கட்டடம் கட்டி கொடுத்தால் வசதியாக இருக்கும்." என, செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கும் போது, ''மதுரை ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரை உரிய மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பும் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டடம் முடிக்கப்படும் தருவாயில் புதிய கட்டடம் தேவைப்படுமானால் நிதி ஒதுக்கி கட்டித் தரப்படும்." என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.