சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக் கூடாது என அரசு உறுதியாக உள்ளதால், விதிமுறைகளை செயல்முறைபடுத்துவதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, '' போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தொகுக்கவும், துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுலவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்திற்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்திற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில், பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். விளையாடுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதிக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
அரசுத் துறைகளால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தங்கும் இடவசதி ஏற்படுத்தி தரப்படும் நிகழ்வுகளில், பாதுகாப்பு கருதி மாணவர்கள் இந்த வசதியை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக பள்ளித் தலைமையாசிரியரால் வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: இனி 'காலனி' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது.. பேரவையில் முழங்கிய ஸ்டாலின்.. என்ன காரணம்?
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கும் வகையில் மாணவர் மனசு பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், பாதுகாப்புக் குழுவிற்கு பொறுப்பான பெண் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமித்து மாணவர் பாதுகாப்பு சார்ந்து விழிப்புணர்வும் வழங்கிட அறிவுறுத்தப்பட வேண்டும்.
உரிய பதிவேடு பராமரிக்கப்பட்டு தினந்தோறும் பெறப்படும் புகார்களை பதிவு செய்து உரிய தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக் கல்வித் துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் எழுதி வைக்கப்பட வேண்டும்.
பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியம். எனவே அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது.
சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் கழிப்பறைகளில் மகளிர் பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை செய்ய பணிக்கப்பட வேண்டும். கவனம் தேவைப்படும் இடங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய மேற்பார்வைகளில் பெண் தலைமை ஆசிரியர்களால் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெண் தலைமை ஆசிரியர் இல்லாதபட்சத்தில் உதவி தலைமை ஆசிரியர் மேற்பார்வையிடுதல் வேண்டும்.
அனைத்து வகையான ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் எப்பொழுதும் ஓர் பெண் ஆசிரியர் அல்லது பணியாளர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆண் ஆசிரியர்களின் அறையில், ஆண் பணியாளர் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதித்தல் கூடாது. இதனை கட்டாயம் நடைமுறை படுத்த வேண்டும்.
இந்தப்பணிகளை ஏதேனும் ஓர் பெண் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் சுழற்சி முறையில் நடைமுறை படுத்த வேண்டும். ஏதேனும் பெண் பணியாளர் விடுப்பில் வருகை புரியாமல் இருந்தால், பிரிதொரு பெண் ஆசிரியர் அல்லது பணியாளர் தொடர்வதை உறுதி செய்திட வேண்டும். சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும் பொழுது குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஓர் பெண் பணியாளர் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.
தற்காப்பின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு NO>GO>TELL (NO- teaching the child to feel no if the child tells unsafe. Go shout tell someone the child trusts alone the = inadent or shout immediately) என்ற பாதுகாப்பு விதியினை தெரிந்துகொள்ள செய்தல் வேண்டும். பெண்கள் பயிலும் பள்ளியில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் (Co-Education) குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருத்தல் வேண்டும்.
பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்