சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. அந்தவகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 26) நடந்தது.
இந்த விவாதத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஊரக வளர்ச்சி திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குறுக்கிட்டு, ''முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது ஏன்?''
''தாய், தாய் திட்டத்தை மறந்துவிட்டீர்கள்'' - அதிமுகவை சாடிய அமைச்சர்!
இந்த திட்டம் 'தாய் திட்டம்' என மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை தாய் திட்டத்தையே அதிமுக ஆட்சி மறந்து விட்டது. தாய், தாய் திட்டம் இரண்டையுமே மறந்துவிட்டீர்கள்'' என பேசினார்.
அதற்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, ''தாய் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. தாய் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. எங்களை வளர்த்து எடுத்த அம்மாவை எந்நாளும் நாங்கள் மறந்ததில்லை.'' என தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 90000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வருகின்ற மார்ச் மாதத்துக்குள் கனவு இல்லம் திட்டத்தில் 1.25 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.
* 4 ஆண்டுகளில் 1122 கோடியில் 3300 பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 98 ஊராட்சி ஒன்றிய கட்டடங்கள் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* கிராமப் புற சாலை திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு 20000 கி.மீ சாலை போட்டு முடிக்கப்படும். இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அனைத்து கிராமங்களிலும் சாலைகள் போடப்பட்டு உள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நடப்பு 2024-2025 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்:
கலைஞர் கொண்டு வந்த சமத்துவபுரம் திட்டமானது 50 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும். நடப்பு 2024-2025 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.
டேங்க் ஆபரேட்டர், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு
கிராமப்புறங்களில் 1200 புதிய நீர்த் தேக்க தொட்டிகள் கட்டப்படும். குடிநீர் திட்டத்தை பொறுத்த அளவில் நமது அரசு பொறுப்பேற்று ஊரக பகுதியில் இருக்கக் கூடிய நீர்த்தேக்க தொட்டி சிறிய அளவில் இருக்கும். அதனை 12 மீட்டராக உயர்த்தி இருக்கிறோம். நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் மாநில அரசின் பங்கு
ஊரக பகுதிகளில் 1 கோடியே 25 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 450 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.1.20 லட்சம், மாநில அரசு ரூ.1.70 லட்சம் வழங்குகிறது. இதில் மத்திய அரசின் தொகையையும் மாநில அரசே வழங்குகிறது.
500 அங்கன்வாடிகளுக்கு ரூ.87 கோடியில் புதிய கட்டிடம்
குடிக்க தண்ணீர், பார்க்க வெளிச்சம், நடக்கப் பாதை, இருக்க வீடு, இதை அடைகின்ற வரை எங்களது பயணம்.. எங்களது முதல்வருடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடங்கள் 157 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும். ஊரக பகுதியில் 500 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.87 கோடி புதிய கட்டடம் கட்டப்படும்.
ஊரக பகுதிகளில் 500 முழுநேர நியாய விலைக்கடைகள்
ஊரக பகுதிகளில் 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து 1 கோடி மரக்கன்றுகள் நடப்படும். ஊரக பகுதிகளில் 500 அரசு பள்ளிகள் ரூ. 50 கோடி மதிப்பீடு சுற்றுசுவர் கட்டப்படும். ஊரகப்பகுதிகளில் இயற்கை மற்றும் நீர்வளப் பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள்
ஊரகப் பகுதியில் உள்ள மண் சாலைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சந்துகளை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ரூ.800 கோடியில் உயர்மட்ட பாலம், 1200 நீர்த்தேக்க தொட்டி
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஊரக பகுதிகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும். ஊரக பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும்.
வன உரிமை சட்டத்தை செயல்படுத்தினால் ரூ.10 கோடி நிதி
நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 69 கோடி ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 278 மலை கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்படும். வன உரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்.
இதையும் படிங்க: நாளை முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்'! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்திற்கு 5 கோடி நிதி
தூய்மைப் பணியாளர்கள் நல பணிகளுக்காக நலவாரியத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படும். 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 150 கோடி ரூபாய் ஆக உயர்த்தப்படும்.
மக்கள் கூடும் இடங்களில் 1500 சுகாதார வளாகங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பல்வேறு அலுவலக மற்றும் பொது பயன்பாட்டு கட்டடங்களை பராமரிக்க விரிவான பராமரிப்பு கொள்கை வகுக்கப்படும். பொது மக்களின் பயன்பாட்டிற்காக கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.'' என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.