தேனி: முறையான சாலை வசதி இல்லாததால் 12 கி.மீ. தூரம் கடந்து ரேசன் பொருள்களை வாங்கி வந்த மலை கிராம மக்களுக்கு, தற்போது குதிரை மூலமாக ரேசன் பொருட்களை மலை கிராமத்திற்கே சென்று விநியோகம் செய்ய அரசு நடவடிகை எடுத்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் வெள்ளகெவி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மேற்கு மலைத்தொடர்ச்சியில் சின்னூர், பெரியூர் மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் இருந்தாலும், மலைக்கிராம மக்களின் போக்குவரத்து பெரியகுளம் பகுதியைச் சார்ந்தே உள்ளது.
இப் பகுதியில் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், சின்னூர், பெரியூர் மலை கிராம மக்கள் மாதம் தோறும் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை, பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உப்புக்காடு மற்றும் சின்னியம்பாளையம் பகுதிக்கு சென்று பொருள்கள் வாங்கும் சூழல் இருந்து வந்தது.

அரசு வழங்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ரேசன் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதற்காக, ரூ.500 முதல் 600 ரூபாய் கொடுத்து, பொருள்களை குதிரைகளில் ஏற்றி மீண்டும் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
ரேசன் பொருட்கள் வாங்க மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து, கிராம மக்கள் பழனி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இதன் விளைவாக மலை கிராம மக்களுக்கு குதிரைகள் மூலம் இருப்பிடத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையும் படிங்க:தென்னிந்தியாவின் உப்புத் தலைநகரத்திற்கே இந்த நிலையா? குஜாரத்திலிருந்து உப்பு இறக்குமதி! |
உத்தரவின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், இந்த மாதம் முதல் ரேசன் பொருட்களை பெரியகுளம் பகுதியில் உள்ள உப்புகாடு, மற்றும் சின்னையாபாளையம் பகுதியில் இருந்து குதிரைகள் மூலம் அரசு செலவிலேயே எடுத்துச் சென்று மலை கிராம மக்கள் இருப்பிடங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று (ஏப்ரல் 26) முதன்முறையாக ரேசன் பொருட்களை மலை கிராமங்களுக்கு குதிரைகளில் ஏற்றிச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கொடைக்கானல் தாலுகாவின் வட்ட வழங்கல் துறை தனி வட்டாட்சியர் சரவணன் மற்றும் வட்ட வழங்கல் துறை ஊழியர்கள், ரேசன் பொருட்களை குதிரைகளில் ஏற்றி மலை கிராமங்களுக்கு கொண்டு சென்றனர். ரேசன் பொருட்களைக் கொண்டு வந்து மலை கிராமத்திலேயே விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கும் மலை கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து, சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர் கூறுகையில், “நாங்கள் இத்தனை நாட்களாக உப்புக்காடு மற்றும் சின்னியம்பாளையம் பகுதிக்கு சென்று பொருள்களை வாங்கி வந்தோம். தற்போது அரசு எங்களுக்கு எங்க ஊருக்கே வந்து பொருள்களை வழங்குவது மிகவும் வசதியாக உள்ளது. அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எங்கள் பகுதிக்கு ஆற்றைக் கடந்து சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது பாலம் அமைப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது. விரைந்து பாலம் கட்டும் பணிகள் முடிந்தால் எங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.