சென்னை: தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக-வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவசுப்பிரமணியத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பத்துரை, தனபால் ஆகியோரும் 6 ஆம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

இதையும் படிங்க: தவெகவில் இணைந்த ஜேப்பியார் மருமகன்! முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு முக்கிய பொறுப்பு
வேட்புமனு தாக்கல் பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெற ஜூன் 12-ஆம் தேதி கடைசி நாளாகும். சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். எனினும், திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பத்துரை, தனபால், மநீம வேட்பாளர் கமல்ஹாசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேருக்கு யாரும் முன்மொழிவு கடிதம் தரவில்லை என்பதால் பரிசீலனையின் போது அவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே திமுக, அதிமுக, மநீம சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகியிருக்கிறது. ஜூன் 19 ஆம் தேதியன்று 6 பேரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்