சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்ச நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
அதே போன்று, ஒன்றிய மோடி அரசு தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து துரோகமிழைத்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான உரிய வரிப் பங்கீட்டை வழங்க மறுப்பது, கல்வி நிதி ஒதுக்க மறுப்பது, நீட் தேர்வில் விலக்கு அளிக்க மறுப்பது, 100 நாள் வேலைஉறுதி அளிப்புத் திட்டத்திற்கான நிதியை நிலுவை வைப்பது, தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பது, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது, கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற தமிழக விரோதப் போக்கை ஒன்றிய அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
ஆளுநர் ஆர்.என். ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும்
— Shanmugam P (@Shanmugamcpim) April 18, 2025
25.04.2025 அன்று சென்னையில் #CPIM முற்றுகை போராட்டம்! pic.twitter.com/FdK4Btgqra
இதையும் படிங்க: வக்ஃப் சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் முழு அடைப்புப் போராட்டம்!
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாட்டுக்கான பல்வேறு நிலுவை தொகைகளை ஒன்றிய அரசு உடனே விடுவிக்கவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.04.2025 அன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இந்த முற்றுகை போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் அளவில் பங்கேற்கின்றனர்"என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.