தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை அதிரடியாக உயரத்தப்பட்டதால் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் மாநகராட்சி அதிகாரிகள், அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரம் கடந்தும் மாநகராட்சி கூட்டம் கூட்டப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தைத் தொடங்காமல் காலதாமதமாக தொடங்குவது வாடிக்கையாக உள்ளதாக கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நண்பகல் 12.10 மணிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடங்கி நிலையில் மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி, தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். சொத்து வரி உயர்வுக்குப் பின் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை! உதயநிதி ஸ்டாலின் 'அசத்தல்' அறிவிப்பு!
இந்நிலையில் இன்றையக் கூட்டத்தில் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டத்துக்கான வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி கூட்டத்தில் நான்காவது, ஐந்தாவது தீர்மானங்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்ததற்கும் கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
வெளிநடப்பில் ஈடுபட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலரும், கொறடாவுமான மந்திர மூர்த்தி, "மாநகராட்சி வரிகள் உயர்த்தப்பட்டதால் தூத்துக்குடி மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா தொற்றின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதில் இருந்தே மீளவில்லை. அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. மக்களை பாதிக்கும் உயர்வை கைவிட வேண்டும்,"என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்