கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் தனியார் காப்பகத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் பகுதியில் தனியார் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் மனவளம் குன்றிய 23 பேர் தங்கி உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் வருண் (21) அங்கு மூன்று மாதத்திற்கு முன்பு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் உள்ளே சென்று காப்பகத்தில் உள்ளவர்களை சந்திக்கக் கூடாது என காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ரவிக்குமாரின் மகன் வருண் காணாமல் போனதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்களிடம் கடந்த 15ஆம் தேதி பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு காப்பகத்தில் உள்ள சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும், அப்போது கடைக்கு சென்ற வருணை காணவில்லை என்றும் காப்பக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காப்பக நிர்வாகிகள் ஆழியார் காவல்நிலையத்தில் வருண் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்ததாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். அதன் பேரில் ரவிக்குமார், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காணாமல் போன வருணை தேடி உள்ளனர். ஆனால் அவர்களால் வருணை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் காப்பக ஊழியர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன. வருண் 15ஆம் தேதிக்கு முன்பே காணாமல் போனதாகவும், அவரை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்ததாகவும், அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் கட்டில் ஆகியவற்றை வேறு அறைக்கு மாற்றியதாகவும் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், தனது உறவினர்களிடம் இது குறித்து கூறவே அங்கிருந்த மற்ற சில ஊழியர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது இதேபோன்று பல மாணவர்களையும் காப்பக நிர்வாகிகள், மாலை வேலைகளில் அடித்து சித்திரவதை செய்ததாகவும் காணாமல் போன வருணை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதில் கால் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக ரவிக்குமார், மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரவிக்குமார் தனது உறவினர்களுடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வருணின் உறவினர்கள் கூறுகையில், காப்பகத்தில் வருண் காணாமல் போனது தொடர்பாக நிர்வாகிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதாகவும், வருண் கடுமையாக தாக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை துவங்கிய நிலையில், கடந்த மூன்று தினங்களாக காப்பக நிர்வாகிகளின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகளின் பேக்கப் இருப்பதாகவும், காப்பகத்தினர் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆழியாறு அணைக்கு அழைத்துச் சென்ற நாளில் வேறொரு சிறுவன் தூரத்தில் நடந்து செல்வதை போன்ற ஒரு சிசிடிவி காட்சியை அவர்கள் காண்பித்ததாகவும், ஆனால் வருண் இல்லை என்பது தெளிவாக தெரிந்ததாகவும் கூறிய உறவினர்கள், தங்கள் மகனை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன், தற்போது காப்பகத்தில் உள்ள மற்ற குழந்தைகளை மீட்டெடுத்து, காப்பகத்தை மூடி சீல் வைக்குமாறும் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி ஏ எஸ் பி சிருஷ்டி சிங் மற்றும் வால்பாறை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் டூ கோவை - விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள இளைஞர் கைது!
இந்நிலையில் வருணை கடந்த 11ஆம் தேதி காப்பகத்தில் இருந்தவர்கள் அடித்து கொலை செய்து பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.நாகூர் மல்லம்பாறை காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்ததாகவும், அதன் பின்னர் 15ஆம் தேதி சுற்றுலா சென்ற இடத்தில் வருண் காணாமல் போனதாக காப்பகத்தினர் நாடகமாடுவதாக போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் போலீசார் தலைமறைவாகியுள்ள காப்பக நிர்வாகிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் இளைஞர் உயிரிழந்தது குறித்து தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.