சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட செல்லவிருந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டை அறிவித்திருந்தது.

- ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும், மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
- வருவாய்த் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என இரண்டிலும் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து, ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமான காரணமின்றி ஏற்கனவே உதவித்தொகை பெற்று வந்து நிறுத்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.
- வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாக 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்துவிட்டு வயது வரம்பு பாராமல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
- வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும் நடைமுறையை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கின்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தனியான வேலை அட்டை வழங்குவதுடன், தொடர்ந்து 100 நாட்கள் வேலை முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் வேலை என ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையை மாற்றி, 8 மணி நேரம் வேலை, நாள் முழுவதும் பணித் தளத்தில் இருக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
- 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய பணித்தளத்திற்கு வாகன ஏற்பாடு, பணித்தளத்தில் கழிப்பறை உள்ளிட்ட சட்டப்படியான, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் செய்து தர வேண்டும்.
- சமூகப் பாதுகாப்பு திட்ட ஒதுக்கீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதியின்படி அவர்களுக்கான வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.
- 2024-25 ஆம் ஆண்டில் வேலை செய்த நாட்களுக்கான ஊதிய பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
- மேலும், ஊதிய தாமதத்திற்கான சட்டப்படியான தாமதக் கட்டணமும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு.. கன்னுக்குட்டிக்கு கிடைத்தது ஜாமீன்
ஆனால், போராட்டத்திற்க்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலிருந்து சென்னை நோக்கி புறப்பட தயாரான அனைத்து மாற்றுத்திறனாளிகளையும், காவல்துறையினர் அவரவர் ஊர்களிலேயே கைது செய்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகையிட செல்ல முயன்ற போது பாரிமுனை சந்திப்பில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.