சென்னை: வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி, காவல்துறை நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "ஆன்லைன் விளையாட்டுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தி கேட்க முடியாது"; தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதம்!
அதில், 'இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்ற மனுதாரரை காவல் துறையினர் ஊருக்குள் அனுமதிக்கவில்லை என்றும், இருந்தபோதிலும் ஊருக்குள் சென்று விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி காவல்துறையினர் மிரட்டியதாகவும், அரசு வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில் எப்படி அசுத்தம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம்.' என்றும் வாதிட்டார்.
காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.