மதுரை: பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பாலாஜி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மதுரை மேலூரைச் சேர்ந்த தினகரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டா வழங்க மனு
அவர் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து சிவகங்கை வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு வருவாய் அலுவலர்கள் என்னை விசாரிக்கவில்லை. ஆவணங்களை கேட்கவில்லை. எனவே வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அரசுத் தரப்பு விளக்கம்
இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு ஆன்லைன் வழியாகவே தெரிவிக்கப்படும்.” என்று கூறப்பட்டது.

மேலும், “ஆன்லைன் விண்ணப்ப முறை இப்படித்தான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வருவாய் அலுவலர்களை நேரில் சந்திக்கும் போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ராணி என்பவர் தொடர்ந்த வழக்கில், பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை விசாரிக்காமல் அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுக
இதில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்காலங்களில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வருவாய் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும்.
இதையும் படிங்க |
இதற்காக இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.
மற்றுமொரு வழக்கு
முன்னதாக, மார்ச் 20 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட கோமதி என்பவரின் மனு மீதான விசாரணையில், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் மனுக்களை முறையாகப் பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், பலமுறை இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் வழக்காடப்பட்டு, பல உத்தரவுகளை பெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி பட்டா வழங்க அரசு அலுவலர்கள் முன்வரவேண்டும் என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.