திண்டுக்கல்: வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் இன்று (ஏப்ரல் 17) அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தியபடி பிரம்மாண்ட பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் வக்ஃப் மசோதா குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசிதழில், "வக்ஃப் சட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது."என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தொடக்கத்தில் இருந்தே வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கும் வந்துள்ளதால் இதற்கு இந்தியா முழுவதும் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி , நெய்க்காரப்பட்டி பாலசமுத்திரம், கீரனூர், ஆயக்குடி உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பழனி பெரிய பள்ளிவாசலில் இருந்து மிகப் பிரம்மாண்டமான பேரணி துவங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் கலந்துகொண்டனர்.
பெரிய பள்ளிவாசல் முதல், கடைவீதி சாலை, காந்தி மார்க்கெட் சாலை, பேருந்து நிலையம், ரயில்வே பீடர் சாலை வழியாக சென்று மின்வாரிய திடலில் பேரணி நிறைவுற்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துக - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!
இதில் மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மத சுதந்திரத்திற்கு எதிரானது, வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம்,வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா அரசியல் அமைப்பிற்கு எதிரானது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சி அனைத்து சமுதாய இஸ்லாமியர் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்