சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் வெளியிட்டன.
அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு மட்டுமே விதிமுறைகளை கொண்டு வர அதிகாரம் உள்ளது," என ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை'
மேலும், "ஆன்லைன் விளையாட்டை இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விளையாட முடியும். விளையாட நினைப்பவர்களின் இந்திய தொலைபேசி எண் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதா? என நிறுவனங்கள் சார்பில் முதலில் சரிபார்க்கப்படுகிறது, விளையாடுவதற்கு முன், ஆன்லைன் விளையாட்டில் பணம் இழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை செய்யப்படுகிறது. மத்திய அரசுக்கு மட்டுமே விதிமுறைகளை கொண்டு வர அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு ஏற்கெனவே விதிகளை இயற்றியுள்ளது. அதை அப்படியே தமிழ்நாடு அரசு புதிய விதியாக கொண்டு வந்துள்ளது'' என ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில், "இந்தியா முழுமைக்கும் விதியை அமல்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட நேரம் தான் ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கிய தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. விதிமுறை என்ற பெயரில் யாரையும் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்படுத்த முடியாது. விதி என்ற பெயரில் டிவி பார்ப்பது மற்றும் விளையாடுவதை கட்டுப்படுத்த முடியுமா?.
'இந்தியர் என்பதற்கான ஒரு ஆதாரம் மட்டுமே'
பொழுதுபோக்கு அம்சங்களான சமூக வலைதளங்கள், யூடியூப், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா? மத்திய அரசு வழங்கிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாடிக்கையாளர் வழங்கிய பிறகே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். மானியம் மற்றும் மத்திய அரசின் குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கட்டாயம் என்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மட்டுமே சட்டமாக இயற்ற முடியும், வேறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆன்லைனில் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு அரசு விதிமுறை கொண்டுவந்துள்ளது முரணாக உள்ளது. ஆன்லைனில் விளையாட ஆதார் கண்டிப்பாக வழங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
அவ்வாறு வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரானது. ஆதார் என்பது இந்தியர் என்பதற்கான ஒரு ஆதாரம் மட்டுமே. ஆதாரை வைத்து வயதை தீர்மானிக்க முடியாது." என ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
'மாநில அரசுக்கு உரிமை உள்ளது'
இதனை தொடர்ந்து நீதிபதிகள், "தமிழ்நாடு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அதற்காக நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது. எல்லா ஆன்லைன் விளையாட்டுகளும் வாடிக்கையாளர்களை அடிமைப்படுத்துவது இல்லை. குறிப்பிட்ட விளையாட்டுகள் மட்டுமே அடிமைப்படுத்துகின்றன. பண ஆசையில் வாடிக்கையாளர்கள் சிலர் தூண்டப்படுகிறார்கள். அதை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை.'' என தெரிவித்து வழக்கை நாளைய (மார்ச் 28) தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.