கோயம்புத்தூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெறுவது வழக்கம். அந்தவகையில் கடந்த வாரம் ஏப்ரல் 11 ஆம் தேதி கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு வந்து தங்கினார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கார் மூலமாக புறப்பட்டு சென்றார். கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
சிகிச்சை முடிந்து வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் காரில் புறப்பட்டுச் சென்றார்.
குறிப்பாக, ''தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதே? இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ''இன்று விடுமுறை'' என கூறினார்.
மேலும் ''அதிமுக-பாஜக இடையே அமைந்துள்ள கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுக-பாஜக இடையேயான வெற்றி கூட்டணியா?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''இன்று விடுமுறை என்பதால் பேட்டி அளிக்கவில்லை'' என்று மீண்டும் கூறி விட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி கலந்து கொண்ட நிகழ்வில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “பொன்முடி போன்றவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள்”- செங்கோட்டையன் காட்டம்!
அப்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது' என்று கூறியிருந்தார்.
வழக்கமாக டெல்லியில் இருந்து தமிழகம் வரும் பாஜக தலைவர்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசுவார். ஆனால் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு ஓ.பன்னீர்செல்வம் கோவை சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்