சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி இந்த விவகாரத்தை டாஸ்மாக் நிறுவனம் திசை திருப்ப முயல்வதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, "டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் அலுவலகத்தில் தங்க வைக்கப்படவில்லை. ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டும் மூன்று நாளும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். சோதனையின் போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் தரவில்லை. அலுவலகத்தின் உடமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. சோதனை குறித்த தகவல்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடப்பட்டு அதில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் ஒப்புதல் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது பெண் அதிகாரிகளை இரவில் தங்க அனுமதிக்கவில்லை. அவர்கள் முன்னதாகவே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சில அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. பொய்யான தகவல்களைக் கூறி இந்த விவகாரத்தை திசை திருப்ப டாஸ்மாக் நிறுவனம் முயற்சி செய்கிறது.
டாஸ்மாக் அலுவலகத்தில் எதற்காக சோதனை நடத்தப்படுகிறது? என்று டாஸ்மாக் தலைவர் மற்றும் மேலாளரிடம் அமலாக்கத் துறை சார்பில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மேலும் அதிகாரிகளுக்கு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது. பெண் ஊழியர்கள் நள்ளிரவு வரை அலுலகத்தில் இருக்கும்படி சொல்லவில்லை. முன்கூட்டியே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். சோதனையின் போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்படவில்லை,"என்றார்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் வாதம் நிறைவடைந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையிலான டாஸ்மாக் தரப்பு வாதம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.