சென்னை: கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிப்பதை தடுக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் சட்ட திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டன.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (வலுகட்டாய நடவடிக்கைகளை தடுத்தல்) சட்டத் திருத்த மசோவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதியும் சட்டப்பேரவையில் கடந்த 26 ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
அதில், ''தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை இந்த சட்ட திருத்த மசோதா பாதுகாக்கும். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ, அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. மீறுபவர்கள் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்''.
மேலும், ''வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்'' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மற்றொரு வேங்கைவயல் சம்பவம்? திருவண்ணாமலை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை பூசிய மர்ம நபர்கள்!
அதேபோல, தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி அவர்களை தடுப்புக் காவலில் வைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மேற்கண்ட சட்ட திருத்த மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்