மதுரை: திமுக பொதுக்குழுவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடி பகுதியில் திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 7000 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், குமரி ஆனந்தன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ரஷ்யா சென்றுள்ளதால் கலந்துகொள்ளவில்லை. மற்ற துணைப் பொதுச்செயலாளர்களான திருச்சி சிவா, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பொதுக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என திமுகவில் உள்ள அணிகளின் எண்ணிக்கையை 25 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு முதல் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கும் 'அட்சய பாத்திரம்'... தென்காசி ராஜம்மாள் பாட்டியின் கதை! |
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
- மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!
- உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!
- ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் - இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
- ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
- மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
- சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
- தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
- ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!
- குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
- அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
- மலரட்டும் மாநில சுயாட்சி!
- பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!
- எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
- அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!
- வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.