சென்னை: கனமழையால் ஏற்பட்ட மின் தடையால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்பதற்கான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம சேஷாத்ரியில் ஒரு மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ஆம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால், மறு தேர்வு நடத்த முடியாது என, தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து நீட் மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க |
அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுமார் 464 மாணவர்கள் அந்த மையத்தில் தேர்வு எழுதியதாகவும், 13 மாணவர்களுக்காக மட்டுமே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர். அதே வேளையில் தேர்வு நடைபெற்ற மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் திங்கட்கிழமை (ஜூன் 16) சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.