திருவண்ணாமலை: பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை சுற்றி மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே போல மற்றொரு சம்பவம் திருவண்ணாமலையில் தற்போது அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்டது பாணாம்பட்டு. இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை (ஏப்ரல் 29) வழக்கம் போல அப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க, ஊருக்கு பொதுவான குடிநீர்த் தொட்டிக்கு சென்ற போது, குடிநீர்த் தொட்டியைச் சுற்றி மனிதக் கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''குடிப்பதற்கு தினந்தோறும் இந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் இந்த மாதிரி அவலத்தை செய்யலாமா? இந்த குடிநீர் தொட்டி புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக யாரோ சிலர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை பூசியிருக்கிறார்கள். அவர்களை சும்மா விடக் கூடாது'' என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை ஆணவக் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
மேலும், இது பற்றி பாணாம்பட்டு கிராம மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை பூசியது யார் என கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவை கலந்த சம்பவம் சமூகத்தில் இன்னும் கூட ஆறாத வடுவாக இருக்கும் நிலையில், திருவண்ணாமலையில் குடிநீர் தொட்டியை சுற்றி மனித கழிவை மர்ம நபர்கள் பூசிய சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்