திருவள்ளூர்: சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லக் கூடிய தண்டவாளத்தில் உள்ள போல்ட்களை மர்ம நபர்கள் கழட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் என்ற இடத்தில், சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு அதி விரைவு ரயில்கள் செல்லக் கூடிய தண்டவாளத்தில் இருந்து, ரயில்கள் பிரிந்து செல்லக் கூடிய முக்கிய இணைப்புப் பகுதியில் இருந்த இரண்டு இரும்பு நெட் போல்டுகளை மர்ம நபர்கள் கழட்டியுள்ளனர். இரவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிக்னல் பிரிவில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள் இதனை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, விரைந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் 50-க்கும் மேற்பட்டோர், ரயில்வே உயரதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக காலையில் செல்லக் கூடிய ரயிலை கவிழ்க்க நடந்த சதி முயற்சி நடந்ததா? என்ற கோணத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் சிக்னல் மாற்றும் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்களிடம் இது எப்படி நடந்தது என்று ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிக்னல் பிரிவில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள், இந்த சம்பவத்தை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லக் கூடிய அதிவிரைவு ரயில் கவிழ்ந்து விபத்துககுள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:100-க்கும் மேற்பட்ட 'கைம்பெண்கள்'... கிராமம் எடுத்த அதிரடி! 'சபாஷ்' போட வைக்கும் தீர்மானம்! |
மேலும், துரிதமாக ரயில்வே ஊழியர்கள் இந்த சம்பவத்தை கண்டுபிடித்ததன் காரணமாகவே, ரயிலை கவிழ்க்க நடந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பகுதியில் எந்தெந்த வாகனங்கள் வந்து சென்றன? மர்ம நபர்கள் எந்த பகுதி வழியாக சென்றனர்? என்று கண்காணிப்பு கேமிரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணையை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.